leader-profile-image

வி.பி.சிங்

  • இந்தியாவின் ‘கலைஞர்’ என போற்றத்தக்கவர், வி.பி. சிங்! ஏனெனில், கலைஞரைப் போலவே பெரும்பான்மை சமுதாயங்களின் மனநிலையோடு சமரசம் செய்துகொண்டு போகவேண்டும் என்று நினைக்காமல், கடைசிவரை சமூகநீதிக்காக துடித்த இதயம் அவருடையது!
  • வி.பி. சிங் போல இந்திய மக்களால் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட ஒரு அரசியல்வாதி வரலாற்றில் இருப்பாரா எனத் தெரியவில்லை. இதற்கு, அவர் மக்கள் பணத்தை பதுக்கி சொத்துசேர்த்தவரோ அல்லது இந்தியாவின் ரகசியங்களை பிறநாட்டுக்கு விட்டுக்கொடுத்தவரோ அல்ல. அப்புறம் ஏன் இந்த வெறுப்பு? வேறு எதற்காகவும் அல்ல, இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கும் இதர பிற்படுத்தப்பட்ட (தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட) மக்களுக்கு படிப்பிலும், வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை அளிக்கும் மண்டல் அறிக்கையை அவர் சட்டமாக்கினார், என்பதற்காகவே!
  • ‘மண்டல் அறிக்கை நல்லது தானே, அதற்கு ஏன் அவரை வெறுக்கவேண்டும்’ என்ற கேள்வி எழலாம். அங்கே தான் ஒளிந்திருக்கிறது, இந்தியாவின் சாதி ஆதிக்கத்தன்மை! உண்மையில், 1989 ஆகஸ்ட் மாதம், வி.பி. சிங் மண்டல் அறிக்கையை கையில் ஏந்தி நாடாளுமன்றத்திற்கு வந்தபோது, இந்தியாவின் அத்தனை பிற்படுத்தப்பட்ட மக்களும் துள்ளி கூத்தாடியிருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. நாடெங்கும் அவருக்கு எதிராக கடும் போராட்டங்கள் நடந்தன. ‘இந்தியாவை சாதி அடிப்படையில் பிரிக்கிறார், வி.பி. சிங்’ என்று பெரும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ‘Anti – Mandal Protests’ என்று இப்போதும் இணையத்தில் அவற்றை நீங்கள் பார்க்கலாம். ஆனால், வி.பி. சிங் சாதி அடிப்படையில் இந்தியாவை பிரிக்க பார்த்தாரா? இல்லவே இல்லை. இந்தியா ஏற்கனவே சாதி அடிப்படையில் பிரிந்து தான் இருந்தது. அதில், வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களுக்காக ஒரு நியாயமான சட்டத்தை கொண்டுவர அவர் எண்ணினார். அவ்வளவே! எதிர்பாராதவிதமாக, இது எதுவுமே இந்திய மக்களுக்கு புரியவில்லை அல்லது புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அவர்களின் கண் கட்டப்பட்டிருந்தது. No doubts… அன்றைய நாடாளுமன்ற அவை கல்வாரி மலை. மண்டல் அறிக்கை ஒரு காகிதச்சிலுவை. அதை எடுத்துவந்த வி.பி. சிங், தலையில் முள்கிரீடத்துக்கு பதிலாக முள்தொப்பி அணிந்திருந்த இயேசு!
  • மண்டல் அறிக்கையை சட்டமாக்கியதற்கு பின்னர், வி.பி. சிங்கின் வாழ்க்கையில் எல்லாமே மாறியது. அவரது பிரதமர் பதவி பறிபோனது. அவரது அரசியல் நண்பர்கள் அவரை விட்டு விலகினார்கள். கட்சி, அமைப்பு, நாடு என எல்லாமே அவரை கைவிட்டது. 1969 முதல் 1989வரை பெரும் ஒளியோடு ஒளிர்ந்து கொண்டிருந்த ஒரு அரசியல்வாதி, ஒரு நல்ல சட்டத்தை நிறைவேற்றியதற்காக, சொந்த நாட்டு மக்களாலேயே அகதியாக மாற்றப்பட்டார். ஆம்! 2008 நவம்பரில் இறக்கும்வரை, வி.பி. சிங்கால் மீண்டும் அரசியல் அரங்கிற்குள் அடியெடுத்துவைக்கவே முடியவில்லை. அரசியல் ஒரு மாயச்சுழி என்பார்கள். ஆனால், வி.பி. சிங்குக்கு மட்டும் அது மரணச்சுழியாகவும் இருந்தது! ஆனாலும், அதைப்பற்றி வி.பி. சிங் எங்கும் பெரிதாய் வருத்தத்தை காட்டவில்லை. ’என் கால்கள் உடைக்கப்பட்டாலும், நான் கோல் அடித்தேன் அல்லவா…’ என்று, குழந்தை சிரிப்புடன் அவர் வாழ்ந்து, மறைந்தார்!
  • உண்மையில், ‘இந்திய பிற்படுத்தப்பட்ட மக்களின் நாயகன்’ என்ற பட்டத்தை எவருக்கேனும் கொடுக்கவேண்டும் என்றால், அது வி.பி. சிங்குக்கு மட்டுமே! ஆனால், 300 ரன்கள் இலக்கு கொண்ட ஆட்டத்தில், 299 ரன்கள் அடித்தவனை விட்டுவிட்டு, 300வது ரன் அடித்தவனை ஆட்டநாயகன் விருதுக்கு அழைப்பதைப் போல, விபி சிங்குக்கு பின்னர் பிற்படுத்தப்பட்டோர் நலம் பேசிய, லாலு, நிதிஷ், முலாயம், சரத் யாதவ் போன்றோர், அந்தப் பட்டத்தை தட்டிச் சென்றார்கள். ஆக, மக்களால் மட்டுமல்ல, வரலாற்றாலும் கூட ஏமாற்றப்பட்ட துயர நாயகன், வி.பி. சிங்!
  • சில தலைவன்களை பொதுவாழ்வில் முறியடித்தாலும், தனிவாழ்வில் அவர்களின் மீது மற்றவர்கள் வைத்திருக்கும் மரியாதையை முறியடிக்க முடியாது. வி.பி. சிங்கும் அப்படியே!  ஒரு உதாரணம்… 1988ம் ஆண்டு தேர்தலில், வி.பி. சிங்குக்கு எதிராக நிற்க சுனில் சாஸ்திரி என்பவரை தேர்ந்தெடுக்கிறார், ராஜீவ். சுனில் சாஸ்திரி வேறு எவருமல்ல, வி.பி. சிங் உத்திரப்பிரதேச முதலமைச்சராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் இருந்தவர். எனவே, சுனில் சாஸ்திரி வி.பி. சிங்கை எதிர்த்து போட்டியிட தயங்குகிறார். ‘அவர் என்னுடைய முதல்வர். அவருக்கு கீழ் நான் அமைச்சராக பணியாற்றியிருக்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலே, என்னை கூடப்பிறந்த தம்பியைப் போல பார்த்துகொண்டவர். என்னுடைய அம்மா அவரை ஐந்தாவது புதல்வன் என்றே எப்போதும் அழைப்பார். அவரை என்னால் எதிர்க்கமுடியாது…’ என்று மறுக்கிறார், சுனில் சாஸ்திரி. ஆனால், ராஜீவ்காந்தி அவரை மிரட்டுகிறார். ‘நீ கட்சிக்கு கட்டுப்பட்டவன் என்பதை மறக்காதே…’  என்று சொல்லி, சாஸ்திரியை சம்மதிக்க வைக்கிறார். என்றாலும், பிரச்சாரத்தில் முடிந்தவரை வி.பி. சிங்கை தாக்காமல் நடந்துகொண்டு கண்ணியம் காத்தார், சுனில் சாஸ்திரி. அது, வி.பி.சிங்குக்கு அவர் காட்டிய நன்றிக்கடன். இப்போது முதல்வரியை படிக்கவும்!
  • வி.பி. சிங், எதற்கும் அஞ்சாதவர். 1984 ராஜீவ் காந்தி அமைத்த அமைச்சரவையில் முதலில் நிதியமைச்சர் பதவியில் இருந்தார், வி.பி. சிங். அப்போது தான்,  சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக இரண்டு பெரும்புள்ளிகளின் வீடுகளில் ஒரே சமயத்தில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது. ஒருவர், திருபாய் அம்பானி. இன்னொருவர், அமிதாப் பச்சன். இது வெளியே பாராட்டப்பட்டாலும் கட்சிக்குள் ரசிக்கப்படவில்லை. எனவே, வி.பி. சிங்கை பாதுகாப்புத் துறைக்கு அமைச்சராக மாற்றுகிறார், ராஜீவ் காந்தி. ஆனால், அங்கேயும் சென்று போபர்ஸ் ஊழலை வெளிக்கொண்டு வருகிறார், வி.பி. சிங். இப்போது ராஜீவுக்கு நிலைமை முழுதாக புரிகிறது. ’இனிமேல் இந்தப்புலி காட்டுக்குள் இருப்பது நரிக்கும், யானைக்கும் மட்டும் அல்ல, சிங்கத்துக்குமே ஆபத்து தான்…’ என்ற முடிவுக்கு அவர் வருகிறார். அடுத்த சில மாதங்களில், தலைமையின் நெருக்கடி தாங்காமல் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறுகிறார், வி.பி. சிங். தலைமை நெருக்கடி என்பது வேறு எதுவுமல்ல, ராஜீவின் நெருக்கடியே தான். ஆனாலும், புலி ஒதுங்கவில்லை. Anti – Rajiv Gandhism’ என்ற ஒற்றைக்கொள்கையை மாநிலக்கட்சிகளிடம் பிரபலமாக்கி, ஆட்சிமாற்றத்தை கொண்டுவந்து திருப்பியடித்தார், வி.பி. சிங்.
  • 1989ல் வி.பி. சிங் அமைத்தது ஒரு வித்தியாசமான அமைச்சரவை. 1977ல் ஜனதா கட்சி அமைத்ததை விட வித்தியாசமான அமைச்சரவை! அதாவது, இதில் பாரதிய ஜனதா கட்சியுடன் சேர்த்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட்டணியில் இருந்தார்கள். ஒரு கட்டத்தில், பாரதிய ஜனதா கட்சியின் கை அதிகமாக ஓங்கியது. அத்வானி ‘ராம் மந்திர் ஜல்தி ஹே….’ என்று ரத யாத்திரை கிளம்பினார். மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்ட வி.பி. சிங்கை அத்வானியின் செய்கை நிறையவே சீண்டியது. அவர், ’ஆட்சியே போனாலும் சரி, அத்வானியை கைது செய்…’ என்று லாலுவுக்கு தகவல் அனுப்பினார். சில நாட்களில் ‘பீகாரில் அத்வானி கைது’ என்று செய்தி வெளியானது. அதைத் தாங்கிப் பறந்த காகிதங்களின் ஈரம் காய்வதற்குள், ‘வி.பி. சிங் ஆட்சி கலைந்தது’ என்ற செய்தியும் உடன்வந்து இணைந்தது! விஸ்வநாத பிரதாப் சிங் எனும் வி.பி. சிங், மதவெறி எனும் அரக்கனை வதம் செய்த வீரனின் புன்னகையுடன் அன்று பிரதமர் அலுவலகத்தை விட்டு வெளியேறினார்.
  • வி.பி. சிங் எதற்கு போற்றப்படுகிறாரோ இல்லையோ, அண்ணல் அம்பேத்கருக்கு ‘பாரத ரத்னா’ அளித்ததற்காக எப்போதும் போற்றப்படுவார். 1947 முதல் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. நடுவில், பாரதிய ஜனதா (அப்போது ஜனசங்கம்) ஆதரவுடன் நடந்த ஜனதா ஆட்சியும் இருந்தது. ஆனால், என்ன பயன்? அம்பேத்கருக்கு பாரத ரத்னா அளிக்க வி.பி. சிங் என்ற ஆட்சியாளனுக்கு மட்டுமே தோன்றியது. ஆகவே தான், ‘ஜெய்பீம்’ என்று இன்று அம்பேத்கரை உயர்த்திப்பிடிக்கும் அத்தனை பேரும், ‘ஜெய்சிங்’ என்று வி.பி. சிங்கை உயர்த்திப்பிடிக்கவும் கடமைப்பட்டவர்கள் ஆகிறார்கள்!
  • வி.பி.சிங், வடக்கே இன்றுமே வில்லன் தான். ஆனால், சமூகநீதி பூத்த தென்மண்ணில், அவர் எப்போதுமே கதாநாயக செல்வாக்கு கொண்டவர். என்றேனும், தெற்கில் இருந்து ஒரு தலைவன் வடக்கையும் சேர்த்து ஆளச்செல்கையில், வி.பி. சிங் அங்கீகாரம் பெறுவார்! அம்பேத்கருக்கு அவர் செய்ததை, அவருக்கு அவன் திரும்பச் செய்வான்!