




நந்தனார்
- கோயிலுக்குள் நுழையக் கூடாது, வேதம் பயிலக் கூடாது என்று தடுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து எழுந்த சிவனடியார். அறுபத்துமூன்று நாயன்மார்களில் முக்கியமானவர்.
- பரமசிவனுக்கு வர்ணமும் இல்லை; சாதியும் இல்லை. அவன் அருளை பூமியில் பிறந்திட்ட எந்த உயிரும் சமமாக அடைய முடியும் என்று நிரூபித்தவர்.
- நந்தனார் ஒரு விவசாயக் கூலி. சிதம்பரம் கோயிலுக்குச் சென்று சிவனை நேரடியாகக் கண்டு, தரிசிக்க வேண்டுமென்பது அவரது பெருவிருப்பமாக இருந்தது. ஆனால், வேதியர்களால் அவர் தடுக்கப்பட்டார். இருந்தாலும் குன்றா மனவுறுதியால் சிதம்பரம் சென்று சிவனை தரிசித்தார். அப்போதும் அவரை வாசலிலேயே நிறுத்தியது சனாதனம்.
- நந்தனாரின் சிவத்தொண்டை `திருத்தொண்டத் தொகை’யில் பெரிதும் போற்றிப் பாடுகிறார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். “செம்மையே திருநாளைப் போவார்க்கு அடியேன்” என்பது அவர் சொல்லும் வரிகள். நந்தனாரின் இன்னொரு பெயர் `திருநாளைப் போவார்’.
- நந்தனாரைப் பற்றி பெரிய புராணத்திலும் வியந்து பாடுகிறார் சிவக் கவி சேக்கிழார். “ஒப்பிலவர் நந்தனார்” என்று மனமுறுகிறார் அவர்.